சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் தேசிய பாடசாலையில் சாதனை மாணவிகளைக் கௌரவிக்கும் விழா!!
மஜீட். ARM
சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் தேசிய பாடசாலையில் 2025ஆம் கல்வியாண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி, 9A உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (2026.07.03) அல்-மர்ஜான் பாடசாலை எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் பாடசாலை அதிபர் மாஹிர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம். பௌமி சுலைமான் மற்றும் ஏ.சி.எம். நயீம், வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான நுஸ்ரத் நிலஃறா மற்றும் சித்தி பாத்திமா, பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
கல்விப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இந்த விழாவில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பாடசாலை அதிபர் மாஹிர் அவர்களது சிறந்த தலைமைத்துவத்தைப் பாராட்டி அவருக்கும் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
No comments