பிள்ளைகளின் போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய பெற்றோருக்கு சோதனை கிட்கள் அறிமுகம் செய்ய அரசு பரிசீலனை!!
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பெற்றோர் தங்களது பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை தனிப்பட்ட முறையில் பரிசோதிக்க உதவும் போதைப்பொருள் பரிசோதனை கிட்களை (Drug Test Kits) அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்த முன்மொழிவு, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "ரடம எகட" (Ratama Ekata) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டு சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட தகவலின்படி, இந்த பரிசோதனை கிட்கள் மருந்தகங்கள் ஊடாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு தனியுரிமையுடன் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துதல், பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான நாடளாவிய ஆய்வை மேற்கொள்ளுதல் மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டன.
அதேவேளை, நாட்டின் சிறைகளில் உள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இது பிரச்சினையின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழித்தல், தடயவியல் (Forensic) பரிசோதனைகளை மேம்படுத்தல், கடல்சார் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் பழக்கமுள்ளவர்களின் புனர்வாழ்வு தொடர்பான சட்டங்களை இறுதிப்படுத்துதல் குறித்தும் அரசாங்கம் ஆலோசனை நடத்தியுள்ளது.
No comments