Column Left

Vettri

Breaking News

ஆறு மாத கால இலக்கை விஞ்சிய சுங்கத் திணைக்களம்: இந்த ஆண்டில் இதுவரை 1.3 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டி சாதனை!!




இலங்கை சுங்கத் திணைக்களம் நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,373.7 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை சுங்கத் திணைக்களம் விஞ்சியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க சிரேஷ்ட பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் பாதிக்காக சுங்கத் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கு 1,060.5 பில்லியன் ரூபாவாகும். எனினும், திறமையான முகாமைத்துவம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 313 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டி திணைக்களம் சாதனை நிலைநாட்டியுள்ளது. வருமானப் புள்ளிவிபரங்கள் மற்றும் இலக்குகள்: 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த இலக்கு: 2,206 பில்லியன் ரூபா. கடந்த ஆண்டு (2025) ஈட்டப்பட்ட சாதனை வருமானம்: 2.5 ட்ரில்லியன் ரூபா. ஜூலை மாதத்திற்கான இலக்கு: 192.4 பில்லியன் ரூபா. ஜூலை முதல் 2 நாட்களில் ஈட்டப்பட்ட வருமானம்: 31 பில்லியன் ரூபா. தற்போதைய வருமானப் போக்கின்படி, கடந்த ஆண்டு எட்டப்பட்ட 2.5 ட்ரில்லியன் ரூபா வரலாற்றுச் சாதனை வருமானத்தை இந்த ஆண்டில் முறியடிக்க முடியும் என சுங்க ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுங்கத் திணைக்களம் ஒட்டுமொத்த வருமானத்தில் பெரும் சாதனை படைத்துள்ள போதிலும், மோட்டார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் இன்னும் நீடிப்பதன் காரணமாக, வாகனத் துறையிலிருந்து திணைக்களத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சந்தன புஞ்சிஹேவா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments