Column Left

Vettri

Breaking News

47 வருடங்களின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் காணிக்கான உறுதி!!




 வி.சுகிர்தகுமார் 

47 வருடங்களின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் காணிக்கான உறுதியற்று வாழ்ந்த குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றும் நடவடிக்கை (25)ஆரம்பமாகியது.
குறித்த கிராமத்தில் காணிக்கான உறுதியற்று வாழ்ந்த 247 குடும்பங்களுக்கான உறுதியினை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடே ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இச்செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக காணியின் உறுதியினை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை பரிசீலித்தல் மற்றும் வீடமைப்பு அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய உரிய பணத்தை பெற்றுக்கொண்டு பற்றுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கையும் கண்ணகிகிராமத்தில் இடம்பெற்றன.
இதன்போது பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான க.கோகுலன் உள்ளிட்;ட பலர் கலந்து கொண்டனர்.

1978ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கனகரெத்தினம் அவர்களால் குடியேற்றப்பட்டு உருவாக்கப்பட்டதே கண்ணகிகிராமம். அவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு 247 வீடுகள் வீடமைப்பு அதிகார சபையால்; அக்காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டது.
 இவ்வாறு அமைக்கப்பட்ட வீடொன்றிற்கு 18ஆயிரம் ரூபாவினை வீடமைப்பு அதிகார சபை செலவு செய்ததாகவும்; பகுதி அடிப்படையில் இப்பணம் மீளச்செலுத்;தப்படவேண்டும் எனவும் மக்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வாறு குறித்த தொகையை மீளச் செலுத்தும் வரையில் காணிகளின் உறுதிகள் பிணையாக அதிகார சபையிடம் கையளிக்கப்படவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 எனினும் முற்றிலும் வறுமை, மற்றும் யுத்தம் போன்றவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட  மக்களால் அத்தொகையை மீளச் செலுத்த முடியாமல் 47 வருடங்கள் கடந்தன.
மக்களின் நிலை பற்றி பிரதேச செயலகமும் தற்போதைய பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீடமைப்பு அதிகார சபையுடன் பேசி இணக்கப்பாட்டுடன் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் வீடமைப்பு உள்ளிட்ட மக்களின் நலன்களில் அதிக அக்கறை காட்டும் வீடமைப்பு அதிகார சபையும் பிரதேச செயலகமும் அரசாங்கமும் ஜனாதிபதியும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தியதுடன் காணி உறுதி பத்திரங்களை மீட்டுக் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்காக கண்ணகிகிராம மக்கள் நன்றி கூறுகின்றனர்.

No comments

Subscribe Us