காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் யார் ? தமிழரசுக்கட்சியின் மௌனம் கலைந்தது!!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச சபைக்கு தவிசாளராக முதல் இரு வருடங்கள் சுப்பிரமணியம் பாஸ்கரனும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் நியமிக்கப்படுவதாக கட்சியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்ஏ .சுமந்திரன் தெரிவித்தார் .
இது விடயத்தை அவர் எழுத்து மூலமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருக்கின்றார்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக யார் தவிசாளர் ? என்பதை தமிழரசுக்கட்சி பகிரங்கமாக அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தது.
கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடந்த மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்சியின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கூட முடிவு அறிவிக்கப்படவில்லை.
ஆனால் நேற்று இம் முடிவு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..
அவர்களது பெயர்களை முன்மொழிந்து வழிமொழிந்து அவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் .
தெரிவு நடைபெறும் இடத்திற்கு வராமல் இருப்பது ,காலம் தாழ்த்தி வருகை தருவது, வாக்களிக்காமல் இருப்பது அல்லது வேறோருவருக்கு வாக்களிப்பது ஆகியன கட்சியின் முடிவை மீறியதாக கருதப்படும் என்பதோடு கட்சியின் முடிவை மீறியமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும் வேண்டி வரும் என்பதையும் அறிய தருகின்றேன்.
என்பதை குறிப்பிட்டு இருக்கின்றார்.
இது தொடர்பாக எமது காரைதீவு நிருபர் சகா நேரடியாக சுமந்திரனிடம் கேட்டபொழுது ..
இவ்வளவு நாளும் இழுபட்டு வந்த இந்த தவிசாளர் தெரிவு விடயம் இன்றுடன் முடிவுக்கு வருகின்றது .
காரைதீவில் தெரிவான உறுப்பினர்களிடையே ஒற்றுமை இருக்க வில்லை . தங்களுக்கு தவிசாளர் பதவி தரப்படவேண்டும் என மூவர் கேட்டு தமக்குள் முரண்பட்டிருந்தனர்.
இந் பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் தலைவருடன் பேசி கட்சியின் தீர்மானத்தை அறிவித்துள்ளேன்.
முதல் இரு வருடங்கள் பாஸ்கரனுக்கும் இரண்டாவது இரண்டு வருடங்கள் ஜெயசிறிலுக்கும் என கட்சி தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே ஜெயசிறில் கோபிகாந்த் ஆகியோர் தவிசாளராக இருந்திருக்கின்றார்கள். எனவே இம்முறை புதிதாக தவிசாளராக பாஸ்கரனை முதல் கட்டத்துக்காக நியமித்திருக்கின்றோம் .
நாம் யாரையும் புறந்தள்ளவில்லை. இது கட்சியின் முடிவு. தலைவருடன் பேசி அதனை அறிவித்து இருக்கின்றேன். என்றார்.
No comments