கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் பேசித் தீர்வு காணப்பட்டதாக ஆதம்பாவா எம்பி அறிவிப்பு!!
(பாறுக் ஷிஹான்)
video link-
https://fromsmash.com/XMthKrezFI-dt
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இஸ்லாமியப் பெண்கள் ஸ்காப் (ஹிஜாப்) அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பான இனவாதச் செயற்பாடுகளுக்குத் தாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.
கல்முனை 'யங் பேட்ஸ்' ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (13) இரவு கல்முனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
"கல்முனை ஆதார வைத்தியசாலையில் எழுந்த இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை தொடர்பில் சுகாதார பிரதி அமைச்சர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுடன் உடனடியாகப் பேசி நடவடிக்கை எடுத்தேன். அதனடிப்படையில், தற்போது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் எவ்வித அசௌகரியங்களுமின்றித் தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர்.
பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காணப்பட்டதைச் சகித்துக்கொள்ள முடியாத சிலர், பாராளுமன்ற உறுப்பினர் எதுவுமே செய்யவில்லை எனக் கூறி சமூக வலைத்தளங்களில் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளை மறந்து விட்டுக்கொடுப்புடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" என அவர் மேலும் வலியுறுத்தினார்.
No comments