ஜும்ஆப் பிரசங்க நேரத்தைக் சுருக்குமாறும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்குமாறும் பள்ளிவாசல்களுக்கு வேண்டுகோள்!!
(பாறுக் ஷிஹான்)
க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தல்
வெள்ளிக்கிழமை தொழுகையை பிற்பகல் 12.45 மணிக்கு முன் நிறைவு செய்ய ஆலோசனை
தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறும், பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கும் அறங்காவலர்களுக்கும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவர்கள், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 14, 21, 28 மற்றும் செப்டெம்பர் 04 ஆகிய திகதிகளில்) ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, தொழுகையையும் சேர்த்து பிற்பகல் 12:45 மணிக்கு முன்னதாக நிறைவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பரீட்சை நடைபெறும் நேரங்களில் — குறிப்பாக, ளுஹர் மற்றும் அஸர் தொழுகை நேரங்களில் — வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டின் அளவைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
முடிந்தவரை பள்ளிவாசலின் உள்ளக ஒலிபெருக்கிகளை (Internal Speakers) மட்டும் பயன்படுத்தி, மாணவர்கள் சிரமமின்றி பரீட்சை எழுதுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பள்ளிவாசல்களின் கதீப்மார்களுக்கும் முஅத்தின்மார்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகின்றது."
இவ்விடயம் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments