Column Left

Vettri

Breaking News

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு விழா!!




நூருல் ஹுதா உமர் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுகள் இன்று (25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன. பாடசாலையின் வரலாற்றுப் பயணத்தையும் கல்விச் சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் 78 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் பாடசாலை வரலாற்றை உள்ளடக்கி ஆசிரியர் எம்.வை.எம்.வை. இம்ரான் அவர்களினால் தொகுக்கப்பட்ட புத்தக வெளியீடும், நினைவு மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது. எதிர்கால தலைமுறையினருக்கான பொறுப்புணர்வையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த மரநடுகை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், பாடசாலைக்கான வலய இணைப்பாளர் ஜெஸ்மி மூஸா, அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா, கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.எம். ஹாஜா, பயிற்றுவிப்பாளர் யூ.எல். பழீல், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் யூ.எல்.எம். ஹாஜா உட்பட பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழகத்தினர், பழைய மாணவிகள் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். மேலும், பாடசாலையின் 78ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக அனுசரணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "Brilliant Gateway" நுழைவாயிலின் திறப்பு நிகழ்வும் இடம்பெற்றது. பாடசாலையின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கங்களை பிரதிபலிக்கும் அடையாளமாக இந்த நுழைவாயில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பழைய மாணவர்களினால் நினைவுப்பேனா (Commemorative Pen) அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியின் அடையாளமாகவும், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பிணைப்பை வலுப்படுத்தும் நினைவுச் சின்னமாகவும் இந்தப் பேனா அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தியில் பங்காற்றிவரும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாடசாலை பற்றிய வரலாற்று பார்வையை ஓய்வுபெற்ற ஆசிரியர் யூ.எம்.அலி நிகழ்த்தியதுடன் துஆ பிரார்த்தனையை கல்முனை பதுரியா ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஜே.எம். றிபாஸ் நஜாஹி நிகழ்த்தினார். அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள், கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மையப்படுத்திய பாடசாலையின் நீண்டகால பயணத்தை நினைவுகூரும் வகையிலும், எதிர்கால வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

No comments