Column Left

Vettri

Breaking News

அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை




அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை பாறுக் ஷிஹான் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அறுகம்பே சுற்றுலா பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசத்தில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனையடுத்து பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேச மக்களுக்கும் அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கும் சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசங்களில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் கடந்த புதன்கிழமை (06) இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உவைஸ் பாறுக் தலைமையில், இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளில் உள்ள 24 இரவு நேர உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சுகாதார நடைமுறைகளை மிகவும் மோசமான முறையில் மீறிய 09 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்துவது தொடர்பில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சுகாதார சீர்கேடாகக் காணப்பட்ட பெருமளவிலான உணவுப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும், உணவகப் பணியாளர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சமையலறைகளின் தூய்மை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த விசேட சோதனையில் பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்

No comments