இன நல்லுறவின் சங்கமம் – காரைதீவு மற்றும் மாளிகைக்காடு மாணவர்களின் ஒன்றுகூடல்
இன நல்லுறவின் சங்கமம்;
காரைதீவு மற்றும் மாளிகைக்காடு மாணவர்களின் ஒன்றுகூடல்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இனங்களுக்கு இடையிலான சகிப்புத்தன்மையையும், சமூக ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் நோக்கில், காரைதீவு மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவர்கள் இணைந்து ஒரு விசேட நல்லுறவுச் சந்திப்பை நடத்தினர்.
காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயம் மற்றும் மாளிகைக்காடு அல்ஹுசைன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் தரம் 4 மாணவர்கள் இந்த உன்னதமான நிகழ்வில் ஒன்றாகச் சங்கமித்தனர்.
இந்தச் சந்திப்பானது வெறும் பாடசாலை நிகழ்வாக மாத்திரமன்றி, இருவேறு கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஒரு பாலமாக அமைந்தது. தரம் 4 மாணவர்கள் மிக உற்சாகத்துடன் ஒருவரையொருவர் கைலாகு கொடுத்து வரவேற்றுக் கொண்டனர். மொழி மற்றும் மத அடையாளங்களைக் கடந்து, 'சிறுவர்கள் அனைவரும் ஒன்றே' என்ற உயரிய பண்பை இந்த நிகழ்வு பறைசாற்றியது.
இரு பாடசாலை மாணவர்களும் தத்தமது கலாசார விழுமியங்கள் மற்றும் கலை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஆசிரியர்கள், "இளம் வயதிலேயே இவ்வாறான சமூக ஒருங்கிணைப்பு நிகழ்வுகள் நடைபெறுவது, எதிர்காலத்தில் ஒரு பலமான மற்றும் அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவும். காரைதீவு மற்றும் மாளிகைக்காடு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்தப் பிணைப்பு ஒரு முன்மாதிரியான செயலாகும்" எனத் தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில், மாணவர்கள் ஒருவருக்கொருவர் நினைவுப் பரிசில்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த நட்புறவு தொடர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் விடைபெற்றனர். இந்தச் சங்கமமானது இப்பகுதியில் இன நல்லுறவை வலுப்படுத்துவதில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
No comments