Column Left

Vettri

Breaking News

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படாது - நளிந்த ஜயதிஸ்ஸ!!




 மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் 100 பில்லியன் ரூபாய் விசேட நிதியொதுக்கீட்டைச் செய்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அதன் முழுமையான பாரத்தை மக்கள் மீது சுமத்தாமல் திறைசேரி ஊடாக நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவர கணிசமான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடி மற்றும் அதன் தாக்கங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் 100 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்தப் பணம் மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் விலைகள் மிக வேகமாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், அந்தப் பாரத்தை முழுமையாக மக்கள் மீது சுமத்தாமல், அதன் ஒரு பகுதியை அரசாங்கத் திறைசேரியும் எரிபொருள் நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது, உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு ஏற்படும்.

உலகின் ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகளும் குழப்பங்களும் நிலவும் சூழலில், இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தைத் தடையின்றி வழங்க அரசாங்கம் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. போரினால் ஏற்பட்ட அசாதாரண சூழல் தணிந்தவுடன், எரிபொருள் விலையைக் குறைக்கவே அரசாங்கம் முயற்சிக்கும்.

கடந்த தேர்தல்களில் மக்கள் எமக்கு ஐந்து ஆண்டுகால ஆட்சிக்கான ஆணையை வழங்கியுள்ளனர். நாட்டை ஸ்திரப்படுத்துவதே ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் போலியான நம்பிக்கைகளை விதைக்காமல், தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.

பிறந்துள்ள புத்தாண்டு புதிய இலக்குகளை நோக்கிய பயணத்துக்கான ஒரு சந்தர்ப்பமாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரமடைந்து வருகிறது. சர்வதேச ரீதியில் இலங்கைக்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறது. உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடு உறுதியாக முன்னேறிச் செல்லும் என்றார்.

No comments