சர்வதேச சிறுவர் தினத்தை கறுப்புப்பட்டி அணிந்து கரிநாளாக அனுஷ்டித்த கிழக்கு சிறுவர்கள்! திருக்கோவிலில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நிறைவு!
( வி.ரி. சகாதேவராஜா)
நேற்றைய சர்வதேச சிறுவர் தினத்தை கிழக்கு மாகாண சிறுவர்கள் கறுப்பு பட்டி தரித்து கரிநாளாக அனுஷ்டித்தனர்.
மேலும் தீப்பந்தம் ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இச்சம்பவம் நேற்று(1) புதன்கிழமை அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் இடம்பெற்றது.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக (27) சனிக்கிழமை ஆரம்பித்த நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (01) புதன்கிழமை ஐந்தாவது நாளாக நடைபெற்று நிறைவடைந்தது தெரிந்ததே.
அதனையடுத்து அதே இடத்தில் அரசியல் வாதிகளை அழைக்காமல் சிறுவர் தினத்தை கறுப்புப்பட்டி தரித்து சிறு ஊர்வலத்துடன் கரிநாளாக அனுஷ்ட்டித்தனர். அங்கு தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட உறவுகளும் அங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் ஆரம்பித்தது.
இப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments