நிறைவு பெற்றது கிழக்கு நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்! சாணக்கியனும் பங்கேற்பு
( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக (27) சனிக்கிழமை ஆரம்பித்த நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (01) புதன்கிழமை ஐந்தாவது நாளாக நடைபெற்று நிறைவடைந்தது.
இறுதிநாள் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் திருக்கோவில் நாவிதன்வெளி காரைதீவு ஆலையடிவேம்பு தவிசாளர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியாக கிழக்கின் மூன்று மாவட்டங்களின் தலைவிகளும் ஐ.நாவுக்கான மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தவிசாளர்களிடம் வழங்கினார்கள்.
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட உறவுகளும் அங்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வயோதிபர் தினமான நேற்று அக்டோபர் முதலாம் திகதியும் வயோதிபர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
பலர் சோர்ந்து காணப்பட்டனர். இன்னும் பலர் அழுதழுது கருத்து கூறினர். வயோதிகர்கள் பலர் படுத்த படுக்கையில் இருந்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் ஆரம்பித்தது.
No comments