ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் களைகட்டி வரும் பகல் இரவுத் திருவிழாக்கள்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பு.நவரூபன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு பூஜைகளுடன் 21 நாள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அங்கு சென்று மலையேறி விநாயகரையும் வணங்கி திருவிழாவில் கலந்து கொண்டுவருகின்றனர். நீண்ட கடைத்தெரு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் தாராளமாக வழங்கப்படுகிறது.
இரவுத் திருவிழா நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றுவருகிறது.
ஆலய புதிய பரிபாலன சபையின் தலைவர் இ.தட்சணாமூர்த்தி செயலாளர் செ.சிறிதரன் பொருளாளர் தா.ஜெயராம் தலைமையிலான நிருவாக சபையினர் ஆலயத்தை அழகாக வடிவமைத்து பரிபாலனம் செய்து வருகின்றனர்.
நேற்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கிரேஷகுமாரன், களுதாவளை பிரதேச சபை தவிசாளர் வினோ, முன்னாள் தவிசாளர்களான சிவ.அகிலேஸ்வரன்( பட்டிப்பளை ), கி.ஜெயசிறில்( காரைதீவு) உள்ளிட்ட பலர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
தினமும் கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கிரேஷகுமாரன் விஜயம் செய்து மக்கள் சார்ந்த நலன்புரி பணிகளை கண்காணித்து வருகின்றார்.
கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 09 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக்கேணியில் தீர்த்தம் ஆடுவதுடன் நிறைவடையவுள்ளது.
No comments