கல்முனை ஆதார வைத்தியசாலையின் உன்னத செயற்பாடுகளுக்கு சமூக பிரதிநிதிகள் பேராதரவு வழங்க தயார்! பணிப்பாளருடனான சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் உறுதி!
(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையின் உன்னத செயற்பாடுகளுக்கு சமூக பிரதிநிதிகள் பேராதரவு வழங்க தயாராக இருப்பதாக வைத்தியசாலை
பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணனுடனான சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த சந்திப்பு நேற்று வைத்தியசாலையில் நடைபெற்றது.
கூடவே, உதவிப் பணிப்பாளர் மருத்துவர் சா.இராஜேந்திரன், கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதிய பரிபாலகர் அ.சசிகரன், நிருவாக உத்தியோகத்தர் அருள் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
"சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை"
என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, கல்முனைப் பிராந்திய சமூகம் சார்பாக சட்டத்தரணி அருள்.நிதான்சன் தலைமையில், சமூக செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையின் இன்றைய நிலை ,அது எதிர்நோக்கும் சவால்கள் ,குறைநிறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
குழுவினர் சார்பில் கருத்து தெரிவிக்கையில்..
புதிய பணிப்பாளரான குணசிங்கம் சுகுணன் அவர்களை கல்முனை சமூகம் சார்பாக வரவேற்பதுடன், அவரின் வைத்தியசாலை சார்ந்த எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீண்ட கால திட்டங்கள், என்பவற்றின் வெற்றிக்கு தாங்கள் தோளோடு தோள் நின்று பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும்,
எமது பங்களிப்பை சகல வழிகளிலும் மக்கள் சார்பாக வழங்குவதற்கு முன்வருவோம் என்ற உறுதி மொழியையும் கூறினார்கள்.
அத்துடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கான வினைத்திறன் நிறைந்த சேவைகளை வழங்கும் பணிப்பாளர் அவர்களை வாழ்த்தி பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
வைத்தியசாலை எதிர்கொள்ளும் குறைபாடுகளை சீர் செய்யவும், நோயாளர்களின் நலன்களை மதித்து திட்டமிட்டு செயல்படும் ஒரு துடிப்பான இளைஞர் என வைத்தியசாலை பணிப்பாளரை பாராட்டியதுடன், இவ்வாறான ஒருவர் இவ் வைத்தியசாலைக்கு கிடைத்தது கல்முனைப் பிரதேச மக்களுக்கு கிடைத்த சொத்து எனவும் கூறினர்.
No comments