புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலைகள் அழிகின்றன ;காரைதீவில் டென்மார்க் நாட்டிய நர்த்தகி சசிதேவி ரைஸ்!!
( வி.ரி. சகாதேவராஜா)
புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன .
என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார்.
காரைதீவு சுவாமி விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளுக்கான பரதநாட்டிய கருத்தரங்கு காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
குறித்த பரதநாட்டிய கருத்தரங்கு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்ற ஆலோசகர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் மணிமண்டபத்தில் நடைபெற்றது .
பரதநாட்டிய வளவாளர் நாட்டியச் செல்வன் சங்கரப்பிள்ளை பிரியாசரவணன் மற்றும் பணிமன்ற தலைவர் எஸ்.சுரநுதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிருத்தியாலய நடனவளவாளரும் யாழ் பல்கலைக்கழக நடனத்துறை மாணவியுமான செல்வி ஜெயகோபன் தக்ஷாளினியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் சசி தேவி உரையாற்றுகையில்..
புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியிலும் அந்த நாட்டு மொழியிலும் கற்பிக்க வேண்டிய சூழல் வளவாளர்களுக்கு இருக்கின்றது. பிள்ளைகள் தமிழ் மொழியில் கற்பதில் சிரமப்படுகிறார்கள்.
இதனால் அங்கு கலைகளை கற்பிப்பதில் சங்கடங்கள் ஏற்படுகின்றன. அதனால் கலைகள் அழிந்து போகுமோ என்ற அச்சமும் இருக்கின்றது. இங்கு சுவாமிகள் பிறந்த மண்ணிலே இத்துணை சிறப்பாக நீங்கள் இயங்கி வருவது பாராட்டுக்குரியது. என்றார் .
பரத நாட்டிய கருத்தரங்கு நான்கு மணி நேரம் நடைபெற்றது .அதன் பின்பு சசிதேவி மற்றும் பிரியசரவணன் ஆகியோர் பணிமன்றத்தால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி பாராட்டப்பட்டார்கள். நடன வளவாளர் திருமதி ஷர்மினி சுதாகரனும் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வை திருமதி வினோதினி ஜெயராஜி தொகுத்து வழங்கினார்.
No comments