மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளராக வினோராஜ் பதவியேற்பு!
செ.துஜியந்தன்
இன்று மாலை மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் புதிய தவிசாளர் உப தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (12) உள்ளுராட்சி மன்றத் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 20 உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், சிறிநேசன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இவ் இரகசிய வாக்கெடுப்பிற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.வினோராஜ், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சண்.கணேசநாதன் ஆகியோர் தவிசாளர் பதவிக்காக போட்டியிட்டனர். இதன்போது இரகசிய வாக்கெடுப்பில் மேகசுந்தரம் வினோராஜ் 10வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து உபதவிசாளரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இவ் வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் அலையப்போடி வசீகரன் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் வதனகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வசீகரன் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
No comments