Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் பதவியேற்பு!!




 திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவினூடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தரலிங்கம் சசிகுமார் இன்று (02) பதவியேற்றார்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வண்டில் சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிட்ட சசிகுமார் தலைமையிலான அணியினர் 10 வட்டாரங்களில் 8 வட்டாரங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்ற அவரது பெயர் வர்த்தமானியில் தவிசாளராக பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கமைவாக இன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு சென்ற சசிகுமார் தலைமையிலான குழுவினர் பூஜை வழிபாடுகளில் பங்கேற்றனர்.
இதன் பிற்பாடு பிரதேச சபைக்கு சென்ற தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை பிரதேச சபை செயலாளர் சீ.திவாகரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து தவிசாளருக்கான சத்தியபிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் உபதவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

நிகழ்வுகளில் ஓய்வு நிலை மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் பிரதேச செயலாளர்களான த.கஜேந்திரன் மற்றும் ரி.அதிசயராஜ் ஓய்வு நிலை அதிபர் ஒலிவர் பிரபாகரன் உள்ளி;ட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்வுகளில் தவிசாளரின் குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த தவிசாளர் இன்றுடன் ஆரம்பமாகும் தமது ஆட்சி காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என உறுதிஅளித்தார். இதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

No comments