எமது உறுப்பினர்கள் யாருக்கும் சோரம் போகமாட்டார்கள் - பொறியியலாளர் சசிகுமார்!!
செ.துஜியந்தன்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபையை எமது சுயேட்சைக்குழு ஒன்று வண்டில் சின்னம் கைப்பற்றி பிரதேசத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. திருக்கோவில் பிரதேசத்தின் பத்து வட்டாரங்களில் எட்டு வட்டாரங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சி எமது உறுப்பினர்களை விலைபேசி திரிகின்றனர். எமது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் யாருக்கும் பணத்திற்கு சோரம் போகமாட்டார்கள். திருக்கோவில் பிரதேச பொதுமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் ஒரு போதும் சிதறிக்கமாட்டோம். எதிர்வரும் நாட்களில் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தி மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிறந்த சேவையை வழங்கவுள்ளோம்.
இவ்வாறு திருக்கோவில் பிரதேச சபை. தேர்தலில் வெற்றிபெற்ற சுயேட்சைக்குழு ஒன்றின் தலைமை வேட்பாளரும் எதிர்கால தவிசாளருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார். திருக்கோவில் உமிரி பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...
கடந்த காலங்களில் திருக்கோவில் பிரதேச சபையை ஆட்சி செய்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். நாம் ஆட்சி அமைத்தால் ஊழல் பேர்வழிகளின் முகத்திரை கிழிக்கப்படும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதன் காரணமாக வெற்றி பெற்ற எமது சுயேட்சை குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில்தான் பேரம் பேசுவதில் ஈடுபட்டுள்ளனர். புதிய அரசாங்கம் லஞ்சம் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருகின்றது. எமது நோக்கமும் லஞ்சம் ஊழலற்ற பிரதேச சபை ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதாகும். இந் நிலையில் எமது உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரைவில் தகுந்த ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருக்கோவில் பிரதேச மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்களின் அபிவிருத்திக்காக ஒற்றுமையுடன் பயணிப்பதற்கும், செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இங்குள்ள இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன் வாருங்கள் ஒன்றுபட்டு மக்கள் பணி செய்வோம். எமது சுயேட்சை குழுவிற்கு மக்கள் வரலாறு காணாத வெற்றியை வழங்கியுள்ளார்கள். அவர்களின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றும் என சுயேட்சை குழு தலைமை வேட்பாளர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார்
No comments