Column Left

Vettri

Breaking News

உள்ளுராட்சித் தேர்தலின் போது அடிப்படை உரிமையை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர்-அப்துல் அஸீஸ்




 பாறுக் ஷிஹான்


1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு யாப்பின்படி, மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை, சுதந்திரமாக அரசியலில் ஈடுபடும் உரிமை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான உரிமைகளுடன் சட்டத்திற்கு முன் யாவரும் சமம் என்பதையும்   உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வகையில் இலங்கை நாட்டின் பிரஜை ஒருவர் அரசியல் விடயங்களில் ஈடுபடவும், தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் உரிமையினைக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் என்பது ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரை தேர்ந்தெடுக்க அல்லது முடிவெடுக்க ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு செயன்முறையாகும்.தேர்தல் திகதி அறிவித்த பின்னர்  அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவரான போட்டியில் வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று அவர்களை அறிமுகம் செய்து வாக்குகளைக் கேட்கும் முறைமையை காலம் காலமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து அல்லது அச்றுறுத்தல் விடுத்து வாக்குகளை கேட்பது தேர்தல் ஜனநாயக முறைமைக்கு முரணாகும்.
ஏப்படி வாக்குப் பதிவு செய்வது என்பதைப் பற்றி தவறான தகவல்களையும், எப்படி வாக்காளர்களைக் குழப்புவது அல்லது தவறான தகவல்களை அளிப்பது இரகசிய வாக்குப் பதிவு முறைமையினை மீறுவது வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டுக்களை முன்கூட்டியே நிரப்புவது, வாக்காளர்களை அச்சுறுத்துவது போன்றவைகள் தேர்தல் மீறல்களாகவே கருதப்படும்.

ஓவ்வொரு அரச உத்தியோகத்தர்களும்  அரசியல் அமைப்பி;ற்கு அமைவாக செயற்படுவதற்கு உறுதிமொழி செய்துள்ளனர். அரச உத்தியோகத்தர்கள் கொண்டுள்ள சட்ட ரீதியான கடமைகளையும், பொறுப்புக்களையும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடல் பக்கச்சார்பாக செயற்படல் அரசியல் அமைப்பு யாப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயலாகும்.

அவ்வாறு மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக 1996ம் ஆண்டின் 21ம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புலனாய்வுகள் மற்றும் விசாரணைகளை  நடாத்துவதற்கு மற்றும் அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.

இந்த அடிப்படையில் எமது பிராந்தியத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன், தேர்தல் தினத்தன்று அல்லது தேர்தலின் பின்னர் அரச, நிருவாக, நிறைவேற்றுத் துறையினர் அடிப்படை உரிமையை மீறியதற்கான அல்லது மீறப்படுவதற்கான ஏதுக்கள் இருக்குமாக இருந்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர், அப்துல் அஸீஸ் தெரிவித்தார். 



No comments