Column Left

Vettri

Breaking News

போதுமான கூட்ட நடப்பெண் இல்லாததால் சபை ஒத்திவைப்பு!!




 சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு போதுமான கூட்ட நடப்பெண் இல்லாததால், எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன .


பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.இதன்போது அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் தொடர்பான சட்டமூலங்களை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில்

சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டின் பொருளாதாரம்,சட்டவாட்சி மற்றும் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை சபையில் முன்வைத்தார். இந்த பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வழிமொழிந்தார். சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் காலை முதல் மாலை 04.15 மணி வரை இடம்பெற்ற நிலையில், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு போதுமான உறுப்பினர்கள் சபையில் இல்லை என்றும் கூட்ட நடப்பெண் தொடர்பில் ஆராயுமாறும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய ஜகத் சமரவிக்ரம, கூட்ட நடப்பெண் தொடர்பில் ஆராய கோரம் ஒலிக்க அறிவித்தார். ஐந்து நிமிடங்கள் கோரம் மணி ஒலித்தும் போதுமான உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. இதனால் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு, சபை நடவடிக்கைகளை எதிர்வரும் மாதம் 04 வரை ஒத்திவைத்தார்.

No comments

Subscribe Us