Column Left

Vettri

Breaking News

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா




(பாறுக் ஷிஹான்) தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1) உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் ஆன்ம சாந்திக்காக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சர்வமத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி மற்றும் பொலிஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, வீரமரணமடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்பாறை பிராந்தியப் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நினைவுச் தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அம்பாறை கோட்டத்திற்குட்பட்ட விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர். இதன்போது உரையாற்றிய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல தெரிவிக்கையில்; "தேசத்தைப் பாதுகாத்து, அதன் மக்களைப் பேணிக்காக்கும் பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த விசேட அதிரடிப்படை வீரர்களின் துணிவும், அர்ப்பணிப்பும், தியாகமும் என்றும் நினைவுகூரத்தக்கவை. இவ்வாறான வீரர்களின் தியாகங்களை என்றும் மறவாது போற்றுவதும், அவர்களின் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதும் பொலிஸ் திணைக்களத்தின் தலையாய கடமையாகும்" எனத் தெரிவித்தார்.

No comments

Subscribe Us