வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது!!
(பாறுக் ஷிஹான்)
video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380), இஸ்மத் (88503) ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக இலங்கை நாட்டு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான லக்ஸ்மன் (24380), சமீர (61949), ஆரிப்தீன் (64940), மனோஜ் (87274), ராஜபக்ஸ(87987) ,பொலிஸ் உத்தியோகத்தர்களான வாசுல (35808), விஜிதரன் (90954) மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க (10560) அடங்கிய பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
No comments