Column Left

Vettri

Breaking News

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!!மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு




(பாறுக் ஷிஹான்) கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் இக்கடமை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் அதிரடிச் சுகாதாரப் பரிசோதனையை முன்னெடுத்தனர். இப்பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட சில வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், சந்தைப் பகுதியிலுள்ள வியாபாரிகளுக்குச் சுகாதார விதிமுறைகள், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அத்தியாவசியச் சுகாதார ஆலோசனைகளும் அதிகாரிகளால் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments