கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு!!
(அபு அலா)
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் புதிய பிரதி மாகாண ஆணையாளராக சிரேஷ்ட வைத்தியர் அன்டன் அனஸ்டீன் இன்று (06) திருகோணமலையில் அமைந்துள்ள சுதேச மருத்துவ திணைக்களத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த இவர், அண்மையில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலமாக இப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டு, இப்பதவியுயர்வு நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நேர்முகத் தேர்வில் அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திற்கு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திணைக்களத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments