சாய்ந்தமருதில் சமூர்த்தி ரண்விமன வீடுகள் கையளிப்பு - 2025/2026!!
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவின் சாய்ந்தமருது -03, சாய்ந்தமருது -06, சாய்ந்தமருது -10 ஆம் கிராம சேவகர் பிரிவுகளில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் சமூர்த்தி சமூக வலுவூட்டல் மாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரிய பயனாளிகளிடம் வீடுகளைக் கையளித்தார்.
இந்த நிகழ்வின் போது வீடுகள் கையளிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 10,000/- பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
ஒரு பயனாளியின் வீட்டில் அரசுக்கு நன்றி தெரிவித்து, கேக் வெட்டிக் கொண்டாடி சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் இதற்காகப் பாடுபட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனாளிகள் தமது உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம். பழீல், சமூர்த்தி தலைமை அலுவலக முகாமையாளர் ஏ.சீ.ஏ நஜீம் சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எம்.இக்றாம், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி அமைப்பின் தலைவர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிருவாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments