Column Left

Vettri

Breaking News

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்!!




பாறுக் ஷிஹான் கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நெளபீஸ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கடமைக்குச் சமூகமளித்திருந்த போதிலும், ஊழியர் ஒருவர் தனக்குரிய கடமைகளை முறையாக செய்யவில்லை என்ற விடயத்தை பதில் ஆணையாளர் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக குறித்த ஊழியரை அவர் நேரில் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அந்த வேளையில், தம்மைக் கேள்வி கேட்ட பதில் ஆணையாளரை அச்சுறுத்தும் பாணியில் குறித்த ஊழியர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார். மாநகர சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்க பெற்றதையடுத்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், கல்முனை பொலிஸ் நிலைய பல்வேறு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us