களைநெல் கட்டுப்பாடு குறித்து அக்கரைப்பற்று கிழக்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!!
நாடு முழுவதும் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களைநெல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு இன்று (25) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ. பெரோஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் களைநெல் முகாமைத்துவம், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், வயல் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் மற்றும் களைநெல்லை பாதுகாப்பான முறையில் அகற்றி எரித்து அழிக்கும் நடைமுறைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதன்போது அக்கரைப்பற்று கிழக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர் இ.சுவர்ணராஜ்,அக்கரைப்பற்று கிழக்கு விவசாய நிலையப்பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம். நிப்ராஸ்,விவசாய விரிவாக்கல் நிலைய உத்தியோகத்தர்களான எம்.எச். நுசைத் மற்றும் எம்.ஏ. சில்மியா. ஆகியோருடன் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
(செல்வி வினாயகமூர்த்தி)
No comments