வெள்ளப்பாதுகாப்பு வீதியின் சில பகுதிகள் உடைந்து விழுந்து நீருக்குள் மூழ்கிவரும் நிலை
வெள்ளப்பாதுகாப்பு வீதியின் சில பகுதிகள் உடைந்து விழுந்து நீருக்குள் மூழ்கிவரும் நிலை
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் முன்பாக அமைந்துள்ள வெள்ளப்பாதுகாப்பு வீதியின் சில பகுதிகள் உடைந்து விழுந்து நீருக்குள் மூழ்கிவரும் நிலையில் அதனை மீள் புனரமைப்பதற்கான முதற்கட்ட பணியினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசனின் ஒத்துழைப்போடு முன்னெடுத்துள்ளார்.
கிராமப்புற சாலை வலையமைப்பில் உள்ள பாதுகாப்பற்ற இடங்களை சரியான முறையில் சீரமைத்தல் எனும் அரசின் வேலைத்திட்டத்திற்கு அமைய இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வீதியின் நிலையினை பார்வையிட்டதுடன் புனரமைக்கப்பட வேண்டிய வீதியின் எல்லையினை அளவீடு செய்தனர்.
குறித்த வீதியானது பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டபோதும் வீதியின் இரு புறங்களும் முறையாக செப்பனிடப்படாமை மற்றும் கனரக வாகனங்களில் போக்குவரத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நாளாந்தம் வீதியின் ஓரங்கள் உடைந்து அருகில் உள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்த வீதியினை புனரமைப்பதற்கான முன்மொழிவினை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments