Column Left

Vettri

Breaking News

உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்!!




பாறுக் ஷிஹான்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன.

 கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் ஆரம்பமாக, காசநோய் ஒழிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரத் துறையினரின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலைய கூட்ட மண்டபத்தில் விசேட கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான முறையான சிகிச்சைகள் குறித்து இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபாசங்கர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் உட்பட ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்

No comments