நிரம்பி வழியும் 89 நீர்த்தேக்கங்கள் - தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
தொடர்ந்தும் பெய்து வரும் மழையினால் நீர்ப்பாசனத் திணைக்கள நிர்வாகத்தின் கீழ் உள்ள 89 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வான் பாய்ந்து வருகின்றன:
அம்பாறையில் 3 நீர்த்தேக்கங்களிலும், அநுராதபுரத்தில் 9 நீர்த்தேக்கங்களிலும், பதுளை மாவட்டத்தில் 4 நீர்த்தேக்கங்களிலும், மட்டக்களப்பில் 2 நீர்த்தேக்கங்களிலும், ஹம்பாந்தோட்டையில் ஒரு நீர்த்தேக்கத்திலும்,
கண்டி மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தில் 3 நீர்த்தேக்கங்களிலும், மொனராகலையில் 2 நீர்த்தேக்கங்களிலும், பொலன்னறுவையில் 2 நீர்த்தேக்கங்களிலும்,
புத்தளம் மாவட்டத்தில் உள்ள 2 பிரதான நீர்த்தேக்கங்களும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களிலும், வவுனியாவில் ஒரு நீர்த்தேக்கமும் வான் பாய்கின்றன.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்சமாகவே உள்ளது.
மன்பிட்டிய பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்காலத்தில் பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாறுபடக்கூடும் என்றும் தெரிவித்தார்.
எனவே, குறித்த நீர்த்தேக்கங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்து அதிக அவதானத்துடன் இருப்பது மிக முக்கியம் என எச்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்தார்.

No comments