நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயம் ; நெல் கொள்வனவு இன்று முதல் - விவசாயத்துறை அமைச்சு
2024/2025 சிறுபோக விவசாய நெல் கொள்வனவு இன்று(புதன்கிழமை)முதல் இடம்பெறவுள்ளது. நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணயத்துக்கு குறைவாக நெல்லை விற்பனை செய்ய வேண்டாம் என்று விவசாயத்துறை அமைச்சு விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளது.
இம்முறை ஈர நெல்லுக்கும் முதன் முறையாக உத்தரவாத விலை விவசாயத்துறை அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வடக்கு,வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் சிறுபோக விவசாயத்துக்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது.இவ்வாறான நிலையில் விவசாயிகளிடமிருந்து இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையால் நெல் கொள்வனவு செய்யப்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நெல் கொள்வனவுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு முதல் கட்டமாக 06 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு விலை மதிப்பீட்டுக்கமைய இம்முறை சிறுபோக விவசாயத்தில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாடு நெல் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் 125 ரூபாவுக்கும், கீரி சம்பா 132 ரூபாவுக்கும் விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய ஈர தன்மையான நாடு நெல்லுக்கு 102 ரூபா, சம்பா நெல்லுக்கு 105 ரூபாய், கீரி சம்பாவுக்கு 112 ரூபாய் என்ற அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈர தன்மையான நெல்லுக்கான குறைந்தபட்ச உத்தரவாத விலையை 120 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் விவசாயத்துறை அமைச்சிடம் வலியுறுத்துகின்றனர்.
No comments