Column Left

Vettri

Breaking News

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய "நாட்டார் கலை நயம்” விழா!!




(பாறுக் ஷிஹான்)

கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட “நாட்டார் கலை நயம் (Rhythm of Folklore)” என்ற சிறப்பு நிகழ்வு     சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

டயகோணியா (Diakonia) அனுசரனையில், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF), சமூக அபிவிருத்தி அமையம் (FSD) மற்றும் கெப்ஸோவுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்குப் பிராந்தியத்தின் பாரம்பரிய பண்பாட்டு முறைமைகளை பிரதிபலிக்கும் விதத்தில் “நாட்டார் கலை நயம் (Rhythm of Folklore)” நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் இக்கலைகள் தொடர்பாக தொகுக்கப்பட்ட டிஜிட்டல் ஆவண தொகுப்புகளும் காண்பிக்கப்பட்டன.

நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி சார்பில் சிரேஷ்ட ஆலோசகர் ஏன் ஜப்பார், சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் லெய்லா உடையார், நிதி உத்தியோகத்தர் குமுதினி பெரேரா மற்றும் பிராந்திய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நாட்டார் கலை டிஜிட்டல் மயப்படுத்தல் திட்டம் தொடர்பான அறிமுக உரையை FSD இன் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்.ஏ. சஜா நிகழ்த்தினார். அத்துடன், நாட்டார் கலை சம்பந்தமான அறிமுக உரையை தொல்பொருளியலாளர் மற்றும் மரபுரிமை ஆய்வாளார் கலாநிதி ஏ.ஆர்.எம். ஜெஸ்மில் நிகழ்த்தினார்.

வரவேற்பு பாடலை சம்மாந்துறை திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் குழுவினர் இசைத்தனர்.

நாட்டார் பாடல்கள் நாட்டாரியல் வித்தகர் எழுகவி அக்கரைப்பற்று எம்.ஐ.எம். ஜலீல் மற்றும் நாட்டார் கலைத்துறை வித்தகர் யூ.எல். ஆதம்பாவா ஆகியோரால் பாடப்பட்டது.

கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் ஆகியோர் உரையாற்றினர்.

சாய்ந்தமருது மருதூர் கலை மன்ற பொல்லடி கலைஞர்களின் நிகழ்வு, மட்டக்களப்பு பறங்கியர் கலாசார சங்க கலைஞர்களால் பேகர் பாடலும் மாவடிப்பள்ளி வளர்பிறை முஸ்லிம் பாரம்பரிய கலாச்சார கலை மன்றம் கலைஞர்களால் சீனடி, சிலம்படி நிகழ்வும் கல்முனை ஸாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களால் மீனவர் பாடலும் , அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்களால் விவசாய பாடலும் இசைக்கப்பட்டு பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது.

கெப்ஸோவின் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்தாத் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வுகளில் பங்குபற்றயவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.









No comments

Subscribe Us