யாழ்.போதனா வைத்தியசாலையின் தன்னார்வ ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு : சுகாதார பிரதி அமைச்சர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தன்னார்வ அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன்படி அவர்களின் பணிப்பிரிவின் கீழ் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்புகள் இடம்பெறுமாக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகம் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) வாய்மூல விடைக்கான கேள்வி வேளையின் போது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் சத்தியமூர்த்தி தங்கமுத்து கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கத் துறையில் 170 பேரை தொழிலுக்கு அமர்த்தியுள்ளார் என்பதையும், இந்த ஊழியர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபாவிற்குக் குறைவான தொகை அவர்களின் 36 மாத தொழிற் காலத்தின் போது ஆகக்கூடுதலாக 05 மாத காலத்திற்கு மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது என்பதையும், இவ்வாறான தொழில் நடைமுறைகள் இலங்கையின் தொழில் சட்டங்களை மீறியுள்ளன என்பதையும், அமைச்சர் அறிவாரா? என்றும் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்,
இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹன்சக விஜேமுனி முகாமைத்துவ சேவை பணிப்பாளரின் 2025 ஜனவரி 22ஆம் திகதிக்குரிய கடிதத்திற்கமைய சுகாதார அமைச்சின் கீழான சகல வைத்தியசாலைகளிலும் நிரந்தர நியமனமற்ற அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை விடவும் மேலதிகமாக பணியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் போது, யாழ். போதனா வைத்தியசாலையில் தன்னார்வ அடிப்படையில் பணியாற்றுபவர்கள் இருப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்தன.
இது தொடர்பில் ஆராய்ந்த போது அங்கே மூன்று மாதங்களுக்கு பணியாற்றுவதற்காக அந்த வைத்தியாசலையின் பிரதி பணிப்பாளராக 2021 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த காலப்பகுதியில் வைத்தியர் சத்தியமூர்த்தி வெளிநாட்டில் பயிற்சியொன்றில் ஈடுபட்டிருந்தார்.
இந்த பணியானது தன்னார்வ அடிப்படையிலான பணி என்பதனால் இதில் தொழில் சட்டங்கள் மீறப்படவில்லை. இவர்கள் அரச பணியாளர்களான நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் தன்னார்வ அடிப்படையில் பயிற்சி பெறுபவர்களாகவே இருந்துள்ளனர். இவர்கள் கொழும்புக்கு வந்து சுகாதார அமைச்சரை சந்தித்தனர்.
அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அவர்களை நிரந்தர பணியில் நியமிப்பதாக கடந்த காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களின் பணிப் பிரிவின் கீழ் நியமனங்கள் இடம்பெறவில்லை. ஆனால் அவ்வாறு நியமனங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக எழுத்துமூலம் அவர்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளோம் என்றார்.
No comments