திருமலை வலய கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம்.; பணிப்பாளர் ரவி மட்டக்களப்பு பணிப்பாளரானார்!
( வி.ரி.சகாதேவராஜா)
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் .
இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர் 2025-06-09 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்,
அச்சமயம் கல்வி பணியக உத்தியோகத்தர்களுடன் இரு பணிப்பாளர்களும் பரஸ்பரம் கலந்துரையாடினர்.
இந்நியமனமானது தற்போதைக்கு பதில் கடமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) பதவியையும் வகிப்பார்.
இதேவேளை, திருகோணமலை கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளராகவிருந்த தினகரன் ரவி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை புதன்கிழமை பதவியேற்பார்.
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்1 அதிகாரியான செல்லத்துரை புவனேந்திரனுக்கான நியமனக்கடிதம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.
காரைதீவைச்சேர்ந்த இவர் ,2009.09.09இல் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் ஆசிரிய நியமனம்பெற்றதுடன் கல்விச்சேவையில் இணைந்துகொண்டார்.
அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்புக்கு 2021.03.23 முதல் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் 2009 இல் இலங்கை கல்வி நிருவாக சேவையில் இணைந்து கல்முனை கல்வி வலயத்தில் கடமையாற்றிய பின்னர் ,2010 முதல் 2018 வரை சம்மாந்துறை கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தி திட்டமிடல்நிர்வாகம் போன்ற பிரிவுகளில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி, 2019 இல் மீண்டும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று 2020.04.16 முதல் கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார் .
இவர் ஆரம்பக்கல்வியை காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையிலும் ,இடைநிலைக்கல்வியை விபுலாநந்த மத்தியகல்லூரியிலும் ,கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியிலும் பயின்று, கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப்பட்டதாரியாகி ,பிரான்சில் தனது கல்வித்திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் முதுநிலைமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
No comments