கல்முனையில் பௌர்ணமி கலைவிழா; ஓய்வுபெறும் பணிப்பாளர் நவநீதனுக்கு கௌரவம் !!
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆனி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (10)செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் , சிரேஸ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் ஆகியோரும் ,கௌரவ அதிதிகளாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் என் .ரமேஸ் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ஆகியோரும் பிரதேச கலைஞர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இன்று 12 ஆம் தேதி அறுபது வயதில் சேவைக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறவுள்ள கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் ச. நவநீதனது காத்திரமான சேவையைப் பாராட்டி கல்முனைத் தமிழ்ச் சங்கம் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு ,,கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களாலும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா பாடி கௌரவிக்கப்பட்டார்.
No comments