Column Left

Vettri

Breaking News

கீரி சம்பா தட்டுப்பாடு;40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி!!




 உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா அரிசி இல்லையென, இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடான 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு பரிந்துரைத்துள்ளது. இதில் 5,000 மெட்ரிக் தொன் அரச நிறுவனங்கள் மூலமாகவும், ஏனைய அரிசியை தனியார் துறை மூலமாகவும் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் குழு கூடியபோது இந்த முடிவு எட்டப்பட்டது.

பிரஜைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இங்கு சுட்டிக்காட்டினார்.

அதன்படி, உள்ளூர் விவசாயியைப் பாதுகாக்க நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதோசாவிடமிருந்து ஒரு கிலோ ரூ. 120 அடிப்படையில் கீரி சம்பா நெல் கொள்முதல் செய்வதைத் தொடர முடிவு செய்யப்பட்டது.

திரிபோஷா உற்பத்திக்கான சோளகத்தைக் களஞ்சியப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தல், பியர் மற்றும் கால்நடை தீவனப் பொருட்களுக்காக அரிசி, உடைத்த அரிசி அல்லது மாற்று மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப சோளம் உற்பத்தி, டின் மீன், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி மற்றும் உப்பு இறக்குமதி குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பசளை இறக்குமதி, கையிருப்பு பராமரிப்பு, விநியோகித்தல் குறித்தும்ஆராயப்பட்டது. சிறுபோகத்திற்கான பசளை விநியோகத்தின் முன்னேற்றம் மற்றும் ஒடபன கடன் வழங்கல் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் சிறு போக அறுவடை குறித்தும் இதன் போது மதிப்பாய்வு செய்யப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


No comments