Column Left

Vettri

Breaking News

ரூ. 20,000 இலஞ்ச ஊழல் வழக்கு: சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு ஆகஸ்ட் 28 வரை விளக்கமறியல்




(பாறுக் ஷிஹான்) ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு ஆகஸ்ட் 28 வரை விளக்கமறியல் ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் (91775) ஹசன் மௌலானா அனுஹர் ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவ பின்னணி: கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரைச் சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்தனர். குறித்த சந்தேகநபர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். இதன்போது, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் பிரகலதன், போதைப்பொருள் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை (B-Report) மூலம் உண்மைகளைத் தெரிவிக்காமல், முறையான குற்றப்பத்திரிகை (Charge Sheet) மூலமாக மட்டுமே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாகச் சந்தேகநபரிடம் ரூ. 20,000 இலஞ்சமாகக் கேட்டுள்ளார். இத்தொகையைச் செலுத்தச் சந்தேகநபர் சம்மதித்ததுடன், ஆகஸ்ட் 17 ஆம் திகதி பணத்தை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பணத்தைப் பெற்றுக்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதன் பெரியநிலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகப் பணி நிமித்தம் சென்றிருந்தார். இதனால், அவரது அறிவுறுத்தலின் பேரில் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொலிஸ் கொன்ஸ்டபிள் அனுஹார் அனுப்பப்பட்டார். அப்போது அங்குத் தயாராக இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பணத்தைப் பெற்றுக் கொண்ட கொன்ஸ்டபிளைக் கையும்களவுமாகக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதனும் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட இவ்விரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Subscribe Us