அம்பாறையில் அவசர கால மீட்புப் பயிற்சி: இளைஞர்களுக்கு 200 மணித்தியால பயிற்சி நெறி ஆரம்பம்!!
(மஜீட். ARM & தில்சாத் பர்வீஸ்)
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் 'உயிர் காப்பு மற்றும் அவசர கால மீட்புக்குழுவின்' இரண்டாம் கட்ட பயிலுனர்களுக்கான ஆரம்ப அறிமுக நிகழ்வு இன்று (15) சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தன்னார்வ இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தேசிய அனர்த்த நிவாரண சேவையின் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது, அவசர கால மீட்புப் பணியில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் மற்றும் சமுதாய நோக்கம் குறித்த தெளிவூட்டல்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பயிலுனர்களுக்கு வழங்கப்படவுள்ள 200 மணித்தியால விரிவான பயிற்சி நெறி குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
No comments