திருக்கோவிலை அதிரவைத்த 1000 மாணவர்களின் "நாத நர்த்தன" பிரமாண்டமான கலை நிகழ்ச்சி!!
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஓரங்கமாக இடம்பெற்ற, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவில் கடந்த (08.08.2026) சனிக்கிழமை திருக்கோவில் வலய 1000 மாணவர்களின்
'நாத நர்த்தன' எனும் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி மற்றும் கலாசார ஊர்வலம் களைகட்டியிருந்தது.
அரச உத்தியோகத்தர்களின் திருவிழா கடந்த (08.08.2026) சனிக்கிழமை கட்டியக்காரனின் கட்டியங்கூறுதலோடு பிற்பகல் 4.30 மணிமுதல் மாலை 5.45 மணிவரை ஊர்வலமாக வந்து, கட்டியக்காரன்,
திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர் .உதயகுமாரிடம் கட்டியச் செய்தியை கையளித்ததும், அவரது தலைமையில் ஆலய வெளிப்பிரகாரத்தில் வடமேற்கிலுள்ள மாமியார் மூலை எனுமிடத்தில்,மாலை 6 மணியளவில் கலைநிகழ்ச்சி ஆரம்பமானது . இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் முன்னிலையில் இடம்பெற்ற இம் மாபெரும் நிகழ்வில்,
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல, பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்ன மற்றும். திருக்கோவில் பிரதேசசெயலாளர் ரி. கஜேந்திரன் ,திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் எஸ் .சசிக்குமார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
600 நடனநர்த்தகிகள், 200 பாலமுருகன் உள்ளிட்ட முருகனின் பல வடிவங்கள், 200 மயில்கள் அடங்கிய
1000 மாணவர்களின் இப்பாரம்பரிய அழகான கலைநிகழ்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாராட்டையும் பெற்றது.
வி.ரி.சகாதேவராஜா
No comments