Column Left

Vettri

Breaking News

மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம் உச்சம்; அடுத்த இரு வாரங்கள் மிக ஆபத்தானது என எச்சரிக்கை!!




மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், அதனால் டெங்கு பரவல் தொடர்பில் அடுத்த 2 வாரங்களும் மிகவும் அபாயகரமானவை என்றும் டெங்கு முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம எச்சரிக்கை விடுத்துள்ளார். 'தெரண பிக் ஃபோகஸ்' (BIG FOCUS) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய டெங்கு பரவலின் அடிப்படையில், இந்த நிலைமை 2017 ஆம் ஆண்டை விடவும் அபாயகரமானதாக அமையக்கூடும் என்று சுட்டிக்காட்டினார். நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் கொள்ளளவை மீறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில வைத்தியசாலைகளில் ஒரே படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே இதற்கான அறிகுறிகள் எங்களுக்குத் தெரிந்தன. இந்த மாற்றத்துடன் நிலைமை சாதகமாக இல்லை என்பதை எங்களால் உணர முடிந்தது. மே, ஜூன், ஜூலை ஆகிய தென்மேற்குப் பருவமழை காலத்திலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய வடகிழக்குப் பருவமழை காலத்திலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண முடிகிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலை வரும்போது, அதற்கு நாங்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டும். பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெப்பம் நிலவியது. கடும் வெப்பம் நிலவும்போது டெங்கு நுளம்புகள் உருவாகும் வேகம் குறைவாகவே இருக்கும். பல்வேறு நாடுகளில் மூன்று டெங்கு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. இலங்கைக்கு இதைக் கொண்டுவருவதாக இருந்தால், நாங்கள் நிறைய விடயங்களைச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதைக் கொண்டுவந்தாலும், இது தொற்றுநோயைக் குறைப்பதற்கு எந்த வகையிலும் உதவாது. இது உண்மையில் இரண்டு டோஸ்களைக் கொண்ட தடுப்பூசியாகும். ஒரு தடுப்பூசி வழங்கப்பட்ட பிறகு, அது செயல்படக் குறிப்பிட்ட காலம் எடுக்கும். ஏற்கனவே ஒருமுறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, இந்தத் தடுப்பூசியின் செயல்பாடு மிகச் சிறந்ததாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

No comments

Subscribe Us