Column Left

Vettri

Breaking News

ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு வரவேற்கத்தக்கது : சமூகப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் தளமாக அமைய வேண்டும் – காதர் மஸ்தான் எம்.பி.!!




நூருல் ஹுதா உமர் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் அண்மையில் ஏற்படுத்தியுள்ள கூட்டிணைவு, சமூகத்தின் பொதுப் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வு காணும் ஒரு நேர்மறையான முயற்சியாக அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருதில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இங்கு உரையாற்றுகையில், எந்தவொரு தரப்பினரும் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காக செயல்பட முன்வருவது வரவேற்கத்தக்க விடயமாகும் என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தக் கூட்டிணைவு தேர்தலை இலக்காகக் கொண்ட அரசியல் கூட்டணி அல்ல என்றும், தமிழ் பேசும் மக்களின் சமூக, அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாடி தீர்வு காணும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர்கள் தெளிவுபடுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். "ஒரே மேசையில் பேசி தீர்க்கக்கூடிய பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பிரச்சினைகள் சமூகத்திற்குள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. அவற்றை அடையாளம் கண்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இந்தக் கூட்டிணைவு அமையுமானால், அது தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி நாட்டிற்கே பயனளிக்கும் நல்ல முன்னேற்றமாக இருக்கும்" என அவர் தெரிவித்தார். மேலும், இந்த முயற்சி பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தி, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்ட அவர், மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை முன்வைத்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பொறுப்பான தளமாக இந்தக் கூட்டிணைவு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டிணைவில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலை மையமாகக் கொண்டு அல்லாது, மக்களின் பொதுப் பிரச்சினைகள், அபிவிருத்தித் தேவைகள் மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் ஒருமித்த குரலை உருவாக்குவதே தங்களது நோக்கம் என அறிவித்துள்ளமை நேர்மறையான சமிக்ஞையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் இந்த ஆறு கட்சிகளின் கூட்டிணைவு மக்கள் நலன் சார்ந்த பலனளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து, தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தரும் அமைப்பாக வளர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்தார்.

No comments

Subscribe Us