Column Left

Vettri

Breaking News

அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம் - அமைச்சர் உபாலி பன்னிலகே!!




அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இப்பிரிவினர் 'விளிம்புநிலை குழுவினர்' (Marginal groups) என வகைப்படுத்தப்பட்டிருந்தனர். கடந்த டிசம்பர் மாதமே இக்குடும்பங்களை அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், 'டிட்வா' (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மேலும் ஆறு மாத காலம் பட்டியலில் நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இக்குடும்பங்களுக்கு மாதாந்தம் சுமார் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அஸ்வெசும பட்டியலில் இருந்த 'இடைநிலை' (Transitional) பிரிவைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் ஏற்கனவே இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போது அஸ்வெசும பட்டியலில் எஞ்சியுள்ளவை 'அதி வறிய' மற்றும் 'வறிய' பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 13 இலட்சம் குடும்பங்கள் மாத்திரமே என்று அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டினார். இதன்படி, அதி வறிய பிரிவில் 9 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களும், வறிய பிரிவில் 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களும் உள்ளனர். அதி வறிய குடும்பங்களுக்கு 17,500 ரூபாயும், வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us