Column Left

Vettri

Breaking News

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையை உடனடியாக தீருங்கள்




ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையை உடனடியாக தீருங்கள்… சுகாதார அமைச்சர் மற்றும் கிழக்கு ஆளுநருக்கு அவசரக் கடிதம் பாறுக் ஷிஹான் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பலவீனம் மற்றும் வைத்திய அத்தியட்சகரின் இடமாற்றத்தினால் வைத்தியசாலைச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவித்து, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். ஏறாவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்குச் சேவையாற்றி வரும் இந்த வைத்தியசாலையில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிரந்தர வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றும் டொக்டர் வருண சம்பத், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு 'மேலதிக கடமை' (Cover-up duty) அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வைத்தியசாலையின் நிரந்தர நிர்வாகத் தலைவர் வாரத்தில் மிகக்கூடுலான நாட்கள் வேறொரு மாகாணத்தில் கடமையாற்றுவதால், இங்குள்ள நிர்வாக ஒழுங்குகள் சீர்குலைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சுபைர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது... ஏறாவூர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் வசித்து வருகின்றனர். ஏறாவூர் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரம் பயன்பாடின்றி உள்ளதுடன், அப்பகுதி தனவந்தர்கள் வழங்க முன்வந்த மேலதிக இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களைப் பொறுப்பேற்று இப்பிரிவைச் செயற்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தூர இடங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுகின்றனர். பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் இண்மையால் இந்த வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சைக் கூடம் பயன்பாடின்றி மூடியே காணப்படுகிறது. இதனால் அங்கிருக்கும் பெறுமதிமிக்க வைத்திய உபகரணங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் 350 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவுக்கு (OPD) வரும் நிலையில், முறையான மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பலவீனம் காரணமாகச் சேவைகளின் தரம் மிக மோசமடைந்துள்ளது. இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் கடும் விமர்சனங்களையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் உட்கட்டுமான அபிவிருத்திகளை தவிர எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. வைத்தியசாலையின் மேலதிக சேவைகள் அதன் முன்னேற்றம் ஆகியன வைத்திய அத்தியட்சகரின் முயற்சியிலும் அவருடைய வினைத்திறனான நிர்வாக செயற்பாடுளிலும் தங்கியுள்ளது. ஏறாவூர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் இங்கிருந்து வைத்தியசாலையை முன்னேற்றவேண்டிய காலகட்டத்தில். கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் அவரை சப்ரகமுவ மாகாணத்திற்குச் சென்று கடமையாற்ற பணித்திருப்பது இங்குள்ள மக்களுக்கு செய்யும் பாரிய அநியாயமாகும். ஒரு நிறுவனத்தினுடைய தலைவருக்கு Cover up Duty வழங்குவதாக இருந்தால் அவர் பணியாற்றுகின்ற மாவட்டத்தில் அல்லது அவருக்கு பக்கத்திலுள்ள நிறுவனங்களை வழங்குவது வழக்கமாகும். ஆனால் ஏறாவூர் வைத்தியசாலையில் இடம்பெற்றிருப்பது ஒரு புதுமையான வேடிக்கையான விடயமாகும். இது மாகாண சுகாதாரத் துறையின் நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகிறது என சுபைர் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். எனவே, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முழுநேர நிர்வாக அதிகாரியை நியமித்து, தேவையான விசேட வைத்திய நிபுணர்களையும் நியமித்து இரத்த சுத்திகரிப்பு (Dialysis) பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைப் பிரிவினையும் உடன் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சுபைர் அந்தக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்

No comments