Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற 46 ஆயிரம்  தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா!




மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா! ( மட்டக்களப்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது . பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்து சிறப்பித்தார். முன்னிலை அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறை கலை கலாசார பீடத் தலைவர் திருமதி விஜிதா திவாகரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை தமிழ் மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர் த.யுவராஜன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில் சுலக்ஷினி புவனேந்திரராஜா தமிழ் மொழி வாழ்த்து பா பாட , வரவேற்புரையை மட்டக்களப்பு தமிழ் சங்க செயலாளர் சட்டத்தரணி மு. கணேசராசா வழங்கினார். மறைந்த தமிழ் ஒளி வித்துவான் செபரெத்தினம் சார்பாக ஒரு தொகுதி நூல்களை கனடா பாடும் மீன் அமைப்பின் பிரதிநிதி பாபு வசந்தகுமார், மட்டக்களப்பு தமிழ் சங்கத்தினரிடம் அங்கு வைபவ ரீதியாக கையளித்தார். சிறப்புரைகளை திருகோணமலை தமிழ் சங்க தலைவர் திருமலை நவம் மற்றும் கல்முனை தமிழ் சங்க தலைவர் சஞ்சீவி சிவகுமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் வெளியீட்டு உரையை தமிழமுதம் தலைவர் சொ. வெற்றியரசன், நூல் நயவுரையை தேசிய கல்வி நிறுவக தமிழ் மொழித்துறைப் பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி ஆகியோர் நிகழ்த்தினர். தமிழமுதம் தலைவர் சொ. வெற்றியரசனுக்கு மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, திருகோணமலை தமிழ் சங்க தலைவர் திருமலை நவம் மற்றும் கல்முனை தமிழ் சங்க தலைவர் சஞ்சீவி சிவகுமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். ஏற்புரையை க.கனகசிங்கம் வழங்க நன்றியுரையை ச. கணேசமூர்த்தி வழங்கினார். பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

No comments