அரசாங்கம் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை தங்குதடையின்றி வழங்க வேண்டும்! மாதாந்த அமர்வில் காரைதீவு தவிசாளர் பாஸ்கரன் வேண்டுகோள்! ஈரானில் கொல்லப்பட்ட 170 பாலகர்களுக்கு மௌன அஞ்சலி!
அரசாங்கம் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை தங்குதடையின்றி வழங்க வேண்டும்!
மாதாந்த அமர்வில் காரைதீவு தவிசாளர் பாஸ்கரன் வேண்டுகோள்!
ஈரானில் கொல்லப்பட்ட 170 பாலகர்களுக்கு மௌன அஞ்சலி!
(சபையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையின் நெல்லுற்பத்தியில் அம்பாறை மாவட்டம் கணிசமான பங்கை வகிக்கிறது. தற்போது விதைப்பு காலம் ஆரம்பமாகியுள்ளது. சமகாலத்தில் எரிபொருள் நெருக்கடி தொடர்கிறது.எனவே அரசாங்கம் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை வேண்டும்.
என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்தார்.
காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் ஒன்பதாவது அமர்வு இன்று (26) வியாழக்கிழமை தலைமை உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோன்று யானைகளின் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சபையில் உப தவிசாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சபை அமர்வில் பிரத்தியேக வகுப்புகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காரைதீவு பிரதேசசபை எல்லைக்குட்பட்டு இயங்கும் தனியார்கல்வி நிலையங்கள் பூரணை தினம் மற்றும் ஞாயிறு தினங்களில் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பூரணை ஞாயிறு தினத்தில் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என உறுப்பினர் சி.சிவகுமார் ஆதரவாக கூறினார்.
மேலும் பிரேத வாகன வாடகை காரைதீவிற்குள் மாற்றப்படாமல் வெளிப் பிரதேசத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வாக்களிப்பு மூலம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் கொல்லப்பட்ட 170 பாலகர்களுக்கு மௌன அஞ்சலி!
சுயேட்சை உறுப்பினர் ஏ.எம்.ஜாகிர் உரையாற்றுகையில்..
அமெரிக்க இஸ்ரேல் படையினரால் ஈரானில் ஐந்து வயதுடைய 170 பாடசாலை பாலகர்கள் கொன்று குவிக்கப்பட்டது. இது
கண்டனத்துக்குரியது.அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் சி.சிவகுமார் பேசுகையில்.
வளைகுடா போர் நடக்கிறது. முள்ளிவாய்க்காலில் அன்று குறித்த நாடுகள் சேர்ந்து கொத்துக் குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக கொன்று குவித்தார்கள். அரசன் அன்றறுப்பான்.தெய்வம் நின்றறுக்கும் என்பார்கள் .எனவே அதுதான் இன்று நடக்கிறது என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏஆர்எம். ஹில்மி உரையாற்றுகையில்..
இரு சமூகங்கள் உள்ள எமது பிரதேச சபைக்குரிய பிரேத வாகனம் கலாசார மண்டபம் ஒரு கலாச்சாரத்திற்குரியதா? ஒரு இனத்திற்கானதா? என்று கேட்க விரும்புகிறேன். அண்மையில் கலாசார மண்டபத்தில் இப்தார் நிகழ்வு நடாத்த இருந்தது. எனினும் சில விஷமிகளின் சின்னத்தனமான சிந்தனையால் அது மறுக்கப்பட்டது. இது அழகல்ல என்றார்.
உறுப்பினர் கி.ஜெயசிறில் ஆக்ரோஷமாக பதிலளிக்க முற்பட்ட போதும் , தவிசாளர் பாஸ்கரன் இடைமறித்து கேட்டுக் கொண்டதற்கிணங்க பிறிதொரு விசேட கூட்டத்தில் கலந்துரையாடுவதென்று முடிவெடுக்கப்பட்டது.
No comments