Column Left

Vettri

Breaking News

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்




ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புறநகர் பகுதிகளில் உள்ள ஆடுகள் சொகுசு காரில் ஏற்றி செல்லப்பட்டு களவாடப்பட்டு வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. அத்துடன் கடந்த சனிக்கிழமை (17) மாலை சந்தேகத்திற்கிடமாக சொகுசு கார் ஒன்று நடமாடுவதாக பொதுமக்களிடம் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாடுகள் மற்றும் பொது மக்களின் தகவலுக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பிரகாரம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் இக்கைது நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் பாலமுனை பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து வாடகை அடிப்படையில் சொகுசு கார் ஒன்றினை பெற்று ஒலுவில் பாலமுனை சம்மாந்துறை போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் வீதியோரங்களில் மேய்கின்ற ஆடுகளை சூட்சுமமாக களவாடி வந்துள்ளனர். இதன்போது உடனடியாக செயற்பட்ட சம்மாந்துறை பொலிஸார் குறித்த காரினை பின்தொடர்ந்து கைப்பற்றியதுடன் காரில் இருந்து 4 ஆடுகளையும் மீட்டதுடன் அதில் பயணம் செய்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் கைதான இரு சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களவாடப்படும் ஆடுகளை கொள்வனவு செய்யும் சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.அச்சந்தேக நபர் தற்போது தலைமைறைவாகி உள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இவ்வாறு பொலிஸாரினால் கைதான சந்தேக நபர்களில் 28 28 வயதுடைய சந்தேக நபர்கள் பாலமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 38 வயதுடைய சந்தேக நபர் மருதமுனை பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மீட்கப்பட்ட ஆடுகள் சொகுசு கார் மற்றும் 3 சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை(18) முன்னிலைப்படுத்திய போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 30 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிடட்டார். அத்துடன் காணாமல் சென்ற ஆடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

No comments

Subscribe Us