Column Left

Vettri

Breaking News

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்! பூண்டுலோயா விவேகானந்தா அதிபர் ரவீந்திரன் வேண்டுகோள்.




மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்! பூண்டுலோயா விவேகானந்தா அதிபர் ரவீந்திரன் வேண்டுகோள். ( வி.ரி.சகாதேவராஜா) நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் எங்களுடைய சொந்த மண் . எங்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது எங்கும் நாடு கடத்த வேண்டாம். இவ்வாறு நுவரெலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்தா மகா வித்தியாலயஅதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தெரிவித்தார். மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது தொடர்பாக பேசப்படுகிறதே. அது தொடர்பாக நேரில் சென்று கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில். நாங்கள் வாழுகின்ற பொழுது இவ்வளவு காலமும் இந்த பெரும்பான்மை இனத்துடனும் முஸ்லிம் இனத்துடனும் சேர்ந்து வாழ்ந்து இருக்கிறோம். எனவே எங்களை நாடு கடத்தவோ பிரதேசத்தை விட்டு துரத்தவோ வேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார். மேலும் கூறுகையில்.. இலங்கையினுடைய இன்றைய பாதிப்பிலே மலையகம் முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையிலே வடகிழக்கை சார்ந்த அரசியல் தலைவர்கள் அரசியல்வாதிகள் ஒரு விடயத்தை முன்வைக்கின்றார்கள். என்னவென்றால் மலையகத்தைச் சார்ந்தவர்கள் வடகிழக்கிலே வந்து குடியேறலாம் என்கின்ற ஒரு கோட்பாட்டை அவர்கள் முன்வைக்கின்றார்கள். 200 ஆண்டு காலம் முன்பு இந்த மலையக மக்கள் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர்கள். எங்களை இங்கு வரவழைத்து எங்களுடைய கூலிகளை பெற்றுக்கொண்டு உழைப்பினை பெற்றுக்கொண்டு இந்த நாட்டை வளம் படுத்தினார்கள். இந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு இது ஒரு இடர் . அதாவது நாங்கள் நினைக்கின்றோம் இதற்கு முன்பதாக இரண்டு எமது தலைமுறையில் இரண்டு பிரச்சனைகளை நாங்கள் கண்டிருக்கின்றோம். ஒன்று சுனாமி. சுனாமி வந்த பொழுது இந்த நாட்டினுடைய கடலோர பிரதேசங்கள் அழிக்கப்பட்டன . இரண்டு.அதற்கு பிறகு கொரோனா என்கின்ற ஒரு கொடிய நோய் முழு நாட்டையும் அழித்தது. இப்பொழுது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது . இந் நிலையில் மக்களை இங்கிருந்து வடகிழக்கிலே குடியேற்றலாம் என்பது எந்த அளவுக்கு பொருத்தப்பாடாக அமையும் என்பது ஒரு கேள்வி குறி . இன்று இந்த நாடு மதங்களை மறந்து இனங்களை மறந்து வாழ்கின்ற ஒரு நாடாக அமைந்திருக்கின்ற பொழுது. இங்கு பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெறுமனே தமிழர்கள் மாத்திரம் அல்ல இங்கு சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அப்படி என்றால் பாதிக்கப்பட்ட சிங்கள முஸ்லிம் மக்களை எங்கு குடியேற்றுவது? என்பது ஒரு கேள்வி . நாங்கள் நினைக்கின்றோம் ஒரு இன பாகுபாட்டை மறந்து ஒட்டுமொத்த இளைஞர்கள் என்ற ஒரு எண்ணம் எல்லோருக்கும் உதயமாக வேண்டும் நான் நினைக்கின்றேன். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடூரமான மனித இனப்படுகொலையிலே எமது மக்கள் இரண்டு பிரதேசங்களுக்கு இங்கிருந்து இடம்பெயர்ந்து போய் சேர்ந்தார்கள். ஒரு சாரார் இந்தியாவை நோக்கி சென்றார்கள். இன்னொரு பகுதியினர் வவுனியா கிளிநொச்சி என்று போனார்கள். அங்கு அவர்கள் தங்களுடைய கலாச்சாரம் தங்களுடைய பண்பாடுகள் எல்லோரையும் மறந்து வடக்கிலே இருக்கின்ற கலாச்சாரத்தோடு அங்கே வாழ்ந்து கொண்டிருப்பதை இன்றும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அப்படிப்பட்ட நிலைமைக்கு எங்களை மாற்ற வேண்டாம். என்றார்.

No comments

Subscribe Us