Column Left

Vettri

Breaking News

புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு-பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்!!




பாறுக் ஷிஹான் 

புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று   மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள   புறநகர் பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புதையல் தோண்டும் நவீன கருவி   மீட்கப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய  மாலை குறித்த கருவி  மீட்கப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக    எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான்  தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட ஜேர்மனி நாட்டு தயாரிப்பிலான குறித்த கருவி நிலத்தடியில் உள்ள தங்கம் உட்பட புதையல்களை இலகுவாக கண்டறியக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் வேறு ஏதாவது சட்டவிரோதமான பொருட்கள் தொடர்பில் புலன்விசாரணைகளை  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய  பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின்  வழிகாட்டுதலில் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திப் பின்னணி

ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள   புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.

கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருப்பதாக நேரில் கண்டவர்கள்  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி  ஏதாவது குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது கடந்த காலங்களில் அப்பகுதியில் இயங்கிய ஆயுதக்குழுக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதா என மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் 07 வருடங்களாக  காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  சட்டவிரோதமாக தனது தந்தை இவ்வாறு ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததை மகன் அறிந்து  அத்துப்பாக்கியை உத்தியோக பூர்வமாக  அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு  ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியை கடிதம் ஊடாக அணுகியுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் குறித்த பிரிவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் உள்ள  பொலிஸ் குழுவினர் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள வீட்டை குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஊடாக அறிவித்த நபருடன் வருகை தந்து அவ்வாயுதத்தை எடுத்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாயுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேககிக்கப்படும் நபர் விமான ரிக்கட் மற்றும் விசா வழங்குதல் தொடர்பான உப  முகவராக செயற்பட்டுள்ளதுடன் சுமார் 7க்கும் மேற்பட்ட மொழியறிவு கொண்டவராக தன்னை இனங்காட்டி சமூகத்தில் நடமாடி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments