Column Left

Vettri

Breaking News

மீண்டும் வழமை நிலைமைக்கு வரும் கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள்!!!




பாறுக் ஷிஹான்

கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும்   கல்முனை பதில் காதி நீதிபதியுமான எம்.ஐ.எம். இல்யாஸ் அறிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று (27)   முதல் ஒவ்வொரு கிழமையும் தினந்தோறும்  திங்கள்  வியாழன் வரை  காலை 9 மணி முதல் 12 மணி வரை  கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அலுவலகத்தில் தற்காலிகமாக  இயங்க ஆரம்பித்துள்ளது.

எனவே தேவை நாடும் பொதுமக்கள் கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகளை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு செல்வதற்கு  ஒத்துழைப்பினை வழங்குமாறு அவர் மேலும் அறிவித்துள்ளார்.

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் நீண்ட காலமாக  முடங்கிய நிலையில் காணப்பட்டதுடன்  பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 01.03.2023 ஆம் திகதி    சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை சமாதான நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக  நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்  கடந்த 2025 ஆகஸ்ட் 18 ஆந் திகதி மாலை  கல்முனை  குவாஷி நீதிமன்ற  நீதிபதியான அவரும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும்  இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில்   இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது சுமார் கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் 2 மாத காலமாக  எவ்வித நடவடிக்கையும் இன்றி முடங்கி காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண  விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும். இலங்கையில்  முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளன.

No comments